நாடு திரும்பிய பசில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம்!

pasil
pasil

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பிடமான, குஜராத் மாநிலத்தில் இடம்பெறவுள்ள பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இந்தப் பொருளாதார மாநாடு இடம்பெறவுள்ளது.

அதில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பங்கேற்க உள்ள நிலையில், ஒரு மாத காலப்பகுதியில், இரண்டாவது முறையாகவும் அவரின் இந்திய விஜயம் அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த நாட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்து இடம்பெறவுள்ள விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் வேங் ஹி (Wang Yi) இன் இலங்கை விஜயம் நிறைவுற்று அடுத்த தினத்தில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் அமைய உள்ளதாக குறித்த இந்திய ஊடகத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வேங் ஹி (Wang Yi எதிர்வரும் ஜனவரி 8 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(01) காலை நாடு திரும்பினார்.