சிக்கல் நிறைந்த மாகாணத்தின் ஆளுநராக சார்ள்ஸ் நியமனம் – சிவஞானம்

cvk
cvk

நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலே மிகவும் சிரமமான ஒரு மாகாணத்தினுடைய ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வடக்கு ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தனது கடமைகளைப் பெறுப்பேற்கும் நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஐனநாயகத்தைப் பிரதிபலிக்கிறவன் என்ற வகையிலும் மண்ணின் நிரந்தரக் குடிமகன் என்ற வகையிலும் புதிய ஆளுநரை வரவேற்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.

இலங்கை நிருவாக சேவையில் இருந்த நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். ஆனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலே மிகவும் சிரமமான சிக்கலான ஒரு மாகாணத்தினுடைய ஆளுநராகவே நீங்கள் பதவியேற்றிருக்கின்றீர்கள்.

சிக்கலான விடயம் ஒன்றை வெளிப்படையாகவே சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறேன்.

அதாவது இந்த மாகாண சபை உருவாக்கத்தின் பின்பாக சேவையாற்றிய எல்லா ஆளுநர்களையும் நான் அறிவேன். அவர்களுடைய செயற்பாட்டையும் நான் தெரிந்திருக்கிறேன்.

பொதுவாகவே ஒரு விடயம் இருக்கிறது. அது என்னவென்றால் இங்கு எவருமே ஆளுநராக அல்லது எந்தப் பதவியானாலும் வரும் போது நல்லவராகத் தான் வருவார்கள்.

இதன் பின்னர் இங்கிருப்பவர்கள் சேர்ந்து பழுதாக்கி நல்லா வருகிறவரை போகும் போது கவலையுடன் செல்கின்ற நிலை தான் இந்த மண்ணிலே இருக்கிறது. இதனை எச்சரிக்கையாக இப்போதும் சொல்லி வைக்கிறேன்.

ஆனால் இது சார்ள்ஸ்சிற்கு தெரியாததும் அல்ல. ஆனால் அதே நேரம் எங்களுடைய மண்ணிலே இருக்கக் கூடிய பிரச்சனைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

திருமதி சார்ள்ஸ் பொறுத்தவரையில் முழு வடக்கு மாகாணத்தினுடைய உயிர்ப்புள்ள ஒரு பிரஜை நிருவாக அதிகாரி என்ற வகையில் பெருமைப்பட வேண்டிய விடயம்.

எந்த ஆளுநருக்கும் மட்டுப்பாடு உண்டு. இருந்தாலும் கூட எதனையும் நிறைவேற்றுகிற போதும் கூட நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியின் பெயரால் தான் நிறைவேற்ற முடியும்.

ஆகவே நீங்கள் ஜனாதிபதியினுடைய கோட்பாடுகளை கொள்கைகளை அமுல் செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை நாங்கள் புரிந்த கொண்டிருக்கிறோம். ஆகவே உங்களுடைய இயல்பிற்கு அப்பாலான விடயங்களை இந்த மண் எதிர்பார்க்காது அல்லது எதிர்பார்த்தால் அது தவறு.

ஒரு நிருவாக அதிகாரியாக இருந்து அந்த அனுபவத்தோடு வந்திருக்கிற உங்களுக்கு இந்தப் பதவியைக் கையாள்வதில் சிரமமாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும் ஒரு செழுமையான மாகாணம் இது உங்களுடைய மாகாணம். எனக்கு எப்படி இந்த மண் உணர்வு இருக்கிறதோ இந்த மாகாணத்தினுடைய பெருமை எப்படி எனக்கும் உரித்தாகிறது என்று நான் நினைக்கிறேனோ எங்களுடைய அந்தக் கௌரவம் எல்லாம் உங்களுக்கும் உண்டு.

ஆனால் எங்களுக்கு எங்கள் மண்ணிற்கு எங்களுடைய மக்களுக்கு இதுவொரு முதலாவது மாகாண சபை. மாகாண சபை என்பது ஜனநாயகக் கட்டமைப்பு, மாகாண சபை என்ற ஒன்று இல்லை என்றால் ஆளுநரும் இல்லை.

அது சேர்ந்து வருகின்ற பதவியாக இருக்கின்றதாலே ஒரு ஜனநாயகக் கட்டமைப்பினுடைய பதவியாக இது இருப்பதானாலே அந்த வகையிலே நீங்கள் எங்களுடைய மக்களுக்கான சேவையை திருப்திகரமாக செய்யக் கூடியவர் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எங்களுக்கு உண்டு.

ஆகவே ஒரு முன்னாள் நிருவாகி என்ற வகையில் அதிலிருந்து ஒரு அரசியல்வாதியாக மாறியிருக்கின்றவன் என்ற வகையிலே உங்களுடைய செயற்பாட்டை பல காலமாக பகுத்துப் பார்த்திருக்கிறேன்.

ஆகவே இந்தப் பதவி சிரமமான பதவியாக இருந்தாலும் நான் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். இது ஒருவருக்கும் எதிரானது அல்ல. அதாவது நான் பார்த்த ஆளுநர்களுக்குள்ளே பள்ளிகக்கார மிகச் சிறந்த ஆளுநர்.

அதற்காக மற்றவர்களை குறை சொல்வதாக இல்லை. நிருவாக அறிவு நிருவாக திறன் எல்லாம் அவரிடம் இருந்தது.

ஆகவே அந்த நிருவாகப் பின்புலத்தில் இருந்து வருகிற நீங்கள் எங்களுடைய மக்களின் தேவைகளை நிறைவு செய்வீர்கள் அனுதாபத்தோடு பார்ப்பீர்கள், அனுதாபத்தோடு அனுகுவீர்கள் உங்களுடைய காலத்தில் ஒரு நல்ல உறவும் முரண்பாடுகள் அற்ற உயர்வும் இந்த மண்ணிற்கு கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இதே வேளையில் இந்தப் பதவி நிச்சயமில்லை. அது உங்களுக்கு நிச்சயம் என்றில்லை. இருந்தும் அந்தப் பதவி இருக்கிற காலத்தில் எங்கள் மக்களுக்கானதை நீங்கள் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதவிக் காலத்தில் மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள் தான் சாதனையாளர்களாக வருவார்கள். ஆகவே நீங்கள் நன்மை செய்து நல்லது செய்து மக்களுடைய நன்மதிப்பை பெற்று சாதனையாளராக மிளிர வேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்” என தெரிவித்தார்.