இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் 55 பேர் நிபந்தனையுடன் விடுதலை!

images 2
images 2

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18, 20 ஆகிய திகதிகளில் இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குசென்ற தமிழக மீனவர்கள் 55 பேர் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு குறித்த மீனவர்கள் அனுப்பப்பட்டனர். இது குறித்த வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அவர்கள் தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தமிழக மீனவர்கள் 55 பேரும், தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத் தண்டனை விதித்து நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை, இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் முடிவினை உடனடியாகக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னதாக இன்று காலை மத்திய அரசுக்கு கடிதமொன்றை அனுப்பியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.