நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துகளில் மூவர் பலி!

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF

காங்கேசன்துறை, வர்த்தவிளான் வீதியில் சாந்த சந்தியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தவிளானிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உந்துருளி எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த உந்துருளியை செலுத்திய நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இளவாழை, உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் சாரதியின் கவனயீனமான வாகன செலுத்துகையே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று பிற்பகல் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – காலி பிரதான வீதியின் பலப்பிட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற குறித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நேற்று காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உந்துருளியொன்று நிட்டம்புவ கண்டி பிரதான வீதியில் முருத்தாவெல பிரதேசத்தில் மகிழுந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது பேருந்தொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரம்புக்க பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.