ஜனாதிபதி திறந்துவைத்த வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏ.ரி.எம் இயந்திரம் பழுது: மாணவர்கள் அவதி

IMG 20220214 WA0001
IMG 20220214 WA0001

கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது . இதனால் மாணவர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் தமது பணத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்

.இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக அண்மையில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் . இவ்வாறு தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் மாணவர்கள் அனைவரும் வசதியற்ற தூர இடங்களிலிருந்து வந்து கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

 அவர்கள் தமது அத்தியாவசியமான உணவு உட்பட அவசிய தேவைகளுக்கு பெற்றோர்களினால் அனுப்பி வைக்கப்படும் சிறிய பணத்தை நாளாந்தம் பெற்று தமது அவசியத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் . இவ்வாறு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பணம் பெற்றுக்கொள்ளும் ஏ.ரி.எம் . இயந்திரம் கடந்த சில தினங்களாக பழுதடைந்துள்ளதால் பூவரசன்குளத்தில் அமைந்துள்ள பணம் பெற்றுக்கொள்ளும் ஏ.ரி.எம் நிலையத்திற்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய தூர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக திருத்தி அமைத்துத்தருமாறு மாணவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர் .