வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இளைஞர் குழு அட்டகாசம்: இருவர் காயம்

002 2
002 2

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (22) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் இளைஞர் குழு வீதியில் நின்று அடிதடியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதியாகவும், பல கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ள இடத்திலேயே இந்த அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.

பொல்லுகள், போத்தல்கள், கல்லுகள் கொண்டு குறித்த குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் குழுவின் அட்டகாசம் தொடர்பில் வவுனியா காவற்துறையினருக்கு அப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்த போதும் தாமதமாக வந்த காவற்துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை அவ் விடத்தில் இருந்து விரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவித்து வரும் நிலையில் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதும், அவர்கள் சீராக அப்பகுதியில் கடமையில் இல்லாமை காரணமாகவே குறித்த அசம்பாவிதங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.