இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ்மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரின் மனுவிற்கு ஆதரவாக சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜராகியிருந்தார், பிரதி வாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை 08.04.2022 அன்று யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்த நீதிபதி சசிதரன் அவர்கள் அன்றில் இருந்து 14 நாட்களுக்கு 22.04.2022 வரை பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பாக இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து 14 நாட்களுக்குள் அவரை கட்சியில் இருந்து நீக்கியமைக்கான விளக்கத்தை யாழ்பாணம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற கட்டளையை சம்பந்தபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சேர்ப்பதில் அரச விடுமுறைகளும் ஒரு தடையாக இருந்தது என அறிய முடிகிறது. இதேவேளை அதை சாட்டாக வைத்து பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் கட்சியில் இருந்து பதவி நிலைகளிலிருந்தும் நீக்கி அவரது பெயருக்கு அவதூறு வருகையில் தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒருசில உயர் பீட உறுப்பினர்களும் மற்றும் கீழ் நிலை உறுப்பினர்களும் நடந்து கொள்ளுவதாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே வேளை அந்த வழக்கு நேற்று 22.04.2022 மீண்டும் யாழ் நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், பொது செயலாளர், நிர்வாக செயலாளர் அவர்களுக்கு பூரண விளக்கம் வழங்கும் பொருட்டு இன்றில் இருந்து (22.04.2022) எதிர்வரும் 06.05.2022 ம் திகதி வரை மீண்டும் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது