கைதான நான்கு காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

police 1 1
police 1 1

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று காவல்துறை கான்ஸ்டபிள்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் காவல்துறைமா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை நீதவான் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என காவல்துறைமா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் நாரஹேன்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதானார்.

அவருக்கு மேலதிகமாக, ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று காவல்துறை கான்ஸ்டபிள்கள் கண்டி, குண்டசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ரம்புக்கனையில் கடந்த 19 ஆம்திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷான் என்ற 42 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், கலவரத்தில் 15அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 8 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.