வன்முறை செயற்பாடுகள் இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கலாம் – சந்திரிக்கா

Chandrika 1 1
Chandrika 1 1

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

நேற்று அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை, பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ருவிட்டர் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.

“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய நமது குடிமக்கள் அனைவருக்கும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”  என அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கு, பொதுமக்கள் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக் கொண்டார்.