தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை’ வெளியிடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இன்றைய முன்மொழிவுகளில் தமிழ் மக்கள் சார்ந்த சில விடயங்களையும் உள்ளடக்குமாறும் தாம் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக இந்த 13 கோரிக்கைகளுக்குள்ளே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான எந்தவொரு விடயங்களும் முன்வைக்கப்படவில்லை. எனவே அந்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
அத்துடன், தனியார் மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த முன்மொழிவுகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.