இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு!

gas 1
gas 1

இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளன.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 3,950 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், இன்று நண்பகலின் பின்னர், சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2,500மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.