இரவு 8 மணிக்கு முன்னதாக சரணடையுமாறு ஜொன்ஸ்டனுக்கு நீதிமன்றம் உத்தரவு!

johnston
johnston

இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று ஆராயப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று பிடியாணை பிறப்பித்தார்.

சந்தேகநபர் தாம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகமான அயேஷா ஜினசேன நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

காவல்துறை குழுக்களை ஈடுபடுத்தி சந்தேகநபர் தங்கியிருந்த வெள்ளவத்தை, வத்தளை, பத்தரமுல்லை, நுகேகொடை, உடாஹமுல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை சோதனைக்கு உட்படுத்திய போதும் அவர் அங்கிருக்கவில்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் அயேஷா ஜினசேன நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினார்.

இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு அவர் கோரினார். இதனை ஆராய்ந்த போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேநேற்று இந்த பிடியாணையை பிறப்பித்தார்.