38.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிப்பு!

IMG 20221201 100609
IMG 20221201 100609

உலகில் 38.4 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.5 மில்லியன் மக்கள் புதிய நோயாளர்கள் என வவுனியா போது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.அருள்மொழி தெரிவித்தார். 


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று  (01) பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 
இவ்வாறு நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எய்ட்ஸ் காரணமாக ஏற்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர்.


இலங்கையை பொறுத்தவரை இதுவரை கணக்கெடுப்பின் பிரகாரம் 3600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 85 வீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு 411 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


வவுனியா மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 எச்.ஐ.வி நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.


2021 ஆம் ஆண்டு இலங்கையின் தரவு அடிப்படையில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் எச். ஐ. வி    தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது 14 வீதமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவர்களில் இளம் ஆண்களே கூடுதலாக உள்ளனர். 
இதற்கு ஆண் ஆணுடன் உறவு கொள்ளலும் போதைவஸ்து பாவனையும் காரணம் என இனம் காணப்பட்டுள்ளது. 


எச். ஐ. வி நோய் அடையாளம் காணப்பட்டு உரிய சிகிச்சையை பெற்றால் சாதாரண மக்கள் போல் வாழ்நாள் முழுவதும் சுகதேகியாக வாழலாம். 


இலங்கையில் ஆணுக்கும் ஆணுக்குமிடையிலான உறவுள்ளவர்களுக்கு அதிகளவில் இந்த நோய் அதிகரித்து வருவதுடன் அடுத்து திருநங்கைகளுக்கும் 1.4 வீதம் என்ற அடிப்படையில் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது. விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இந்நோய் பரவி வருகின்றது. 


வவுனியா மாவட்டம் எல்லோரும் கூடும் மத்திய இடமாக காணப்படுவதனால் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் பிரயாணம் செய்யும்போது வவுனியா கேந்திர நிலையமாக காணப்படுவதால் இங்கு விபச்சாரம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. எனினும் நிரந்தரவாசிகள் இந்த தொழிலில் ஈடுபடுவது குறைவாகவுள்ளது. வேறு மாவட்டத்தவர்களை இதில் ஈடுபடுகின்றனர். 


எனவே அவர்களுக்கு இந்த நோய் உள்ளதா என்பதை பரிசோதிக்க முடியாதுள்ளது. இதனால் வவுனியாவில் இந் நோய் பரவிவருகிறது. காவற்துறையினரால் கைது செய்யப்படும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்தபோது அவர்களுக்கு இந்நோய் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.