டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது!

01 More
01 More

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு அமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய எரிபொருட்களின் விலை மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அது பேருந்து கட்டணங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் இல்லை என குறிப்பிட்டார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை 35 முதல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக ஐரோப்பிய சந்தையில் சமையல் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்துக்கு அமைய இந்த விலை திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை, 4, 610 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிரோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 850 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 860 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.