காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் – கோட்டாபயவின் கருத்திற்கு எதிர்ப்பு!

IMG 0111
IMG 0111

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் என்று கோட்டாபய சொல்வதை ஏற்று கொள்ள முடியாது என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (23) ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பில் அதன் தலைவி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்ட எந்த உறவுகளும் தன்னிடம் இல்லை என்பதையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்திற்கு மறுப்பு அறிக்கையினை நாங்கள் விடுகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக போர்காலப் பகுதியில் இருந்த காலகட்டத்தில்தான் எமது உறவுகள் படையினரிடம் கையளித்ததும், காணாமல் ஆக்கப்பட்டதும். மே 18ம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடித்தான் எங்கள் உறவுகளை அவர்கள் பெற்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் விடுதலைப்புலிகளை சாட்டுவதை முழுமையாக கண்டிக்கின்றோம்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறித்தான் எங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்தோம். அன்று இருந்தவர்கள் இன்று அரசாகவும் இருக்கின்றார்கள். அவர்களே இன்று
முற்றிலும் மாறான கருத்தினை வெளியிட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறும் உள்ளது .

வெள்ளைக் கொடியுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள் நாங்கள் விடுவிப்போம் என்று இன்று படை தளபதிகளாக இருக்கின்றார்கள் அன்று தெரிவித்திருந்தார்கள்.

ஜனாதிபதியின் மரண சான்றிதழுக்காகவா பத்து ஆண்டுகள் காத்திருந்தோம்? படையினரிடம் கையளித்த உறவுகளுக்கான நீதிவேண்டும். தான் போர்க் குற்றத்திற்குள்ளால் தப்புவதற்காக எங்களை குற்றவாளிகளாக்கி மரணச் சான்றிதழ் வழங்கப் போவதை நாங்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஜனாதிபதி சொல்லும் குற்றத்தினை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. தான் கைது செய்யவில்லை என்றும் மரணசான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதியின் கருத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் வன்மையாக கண்டனம் தெரிவிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இந்த அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி தேடிக்கொண்டிருக்கின்றோம். அந்த உறவுகளை இல்லாமல் போகச் செய்யாமல் எங்களுக்கான நீதி வேண்டும்.

எங்களுக்கான நீதி இலங்கையில் கிடைக்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்தி எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? எப்போது விடுதலை என்பதை பெற்றுத் தரவேண்டும் அது மட்டும் நாங்கள் போராட்டத்தினை கைவிடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.