550 உயிரினங்களை எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய பிரஜைகள் கைது.

IMG 20200303 WA0020
IMG 20200303 WA0020

ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் (03.03.2020) அன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள், தேள்கள், தவளைகள், பள்ளிகள், நத்தைகள், சிலந்திகள், பாம்புகள் உட்பட 550 உயிரினங்களை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த பெட்டிகளில் அடைத்து அவர்கள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கையிலேயே வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் (03.03.2020) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட உயிரினங்களுள், உயிருடன் இருப்பவற்றை விடுவிப்பதற்கும், ஏனையவற்றை ஆய்வுக்கான அனுப்புமாறும், உயிரினங்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயண திரவியத்தை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது பணிக்கப்பட்டுள்ளது.

இம்மூவரும் பலவகையான இரசாயண திரவியங்களைப் பயன்படுத்தியே ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து இந்த உயிரினங்களை பிடித்துள்ளனர் என்றும், விலங்குகளுக்கான சிறப்பு கொள்கலனகளில் அடைத்தே அவற்றை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர் என்றும் வனத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இவர்களில் பெப்ரவரி 12 ஆம் திகதியே நாட்டுக்கு வந்துள்ளனர். உயிரினங்களை சேகரித்துக் கொண்டிருக்கையில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த இடமும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.