60 டொலர் வரிச் சலுகையினை யாழ்.விமான நிலையத்திற்கும் வழங்குங்கள்-யாழ்.மா.சபையில் தீர்மானம்

download 4 1
download 4 1

தெற்கின் மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களுற்கு வழங்கப்பட்ட 60 டொலர் வரிச் சலுகையினை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் வழங்கி வடக்கின் மக்களும் நன்மைபெற ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் முன் வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றவேளையே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் , சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளிற்கான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துக் கானப்படும் நிலையில் அதனை குறைத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினை ஒத்த கட்டனத்தை அறவிடும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளிடம் அறவிடப்படும் 60 டொலர் வரியினை 2 ஆண்டுகளிற்கு நீக்குவதன் மூலம் வேறு விமான சேவை நிறுவனங்களும் இங்கே சேவையாற்ற முன் வருவார்கள் . அதேநேரம் கட்டுநாயக்காவை ஒத்த கட்டணமே இங்கும் அறவிடப்படும். இக்காலப்பகுதியில் விமான நிலையத்மின் அபிவிருத்தி இடம்பெற்றதும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தும் 155 பயணிகள் பயணிக்கும் விமானம் தரை இறங்கும் வசதி ஏற்பட்டதும் விமானச் சிட்டையின. கட்டனம் குறைவடையும் அப்போது இந்த வரியினை அரசு அறவிடலாம்.

எனவே போரினால் பாதித்த மாகாணத்தில் கட்டப்பட்ட ஓர் முக்கிய அபிவிருத்தியின் நன்மை இந்த மாகாண மக்கள் முழுமையாக அனுபவிக்க அரசு இதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இந்த வரிச் சலுகையினை யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு அரசு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலரும் கோரிய அதேநேரம் இந்தியத் தூதுவரும் அரசிடம் கோரியிருந்தார். இருப்பினும் யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பில் அரசு கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

இதேநேரம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் மறுநாள் 27ஆம் திகதி இடம்பெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 16வது தீர்மானமாக நாட்டின் மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களின் சேவையின்போது அறவிடப்படும் 60 டொலர் வரி முழுமையாக நீக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வடக்கு மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட சபை இல்லாத நிலையிலும் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகர சபை என்ற வகையிலும் இந்த மாகாண மக்களின் நன்மை கருதிய இவ் விடயத்தில் மாநகர சபை கருசணை கொண்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது அறவிடப்படும் 60 டொலர் வரியினையும் மேலே கூறிய இரு விமான நிலையங்களிற்கும் வழங்கிய வரிச் சலுகையினைப்போன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் வழங்க வேண்டும் என இச் சபை கோரி நிற்பதோடு குறித்த அவசர தீ்மானத்தை நாட்டின் ஜனாதிபதி , விமான போக்குவரத்து அமைச்சர் , சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

இதேநேரம் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணித்து அதேவழியில் திரும்பும் பயணிக்கு 15 கிலோ மட்டும் அனுமதிக்கும் விமான சேவை நிறுவனம் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணித்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் வழியாக திரும்பினால் 30 கிலோ அனுமதிக்கப்படுகின்றது . எனவே இவற்றினை சீர் செய்ய இலங்கை அரசு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் 60 டொலரை ஏனைய இரு விமான நிலையத்திற்கு அளித்த வரிச் சலுகை போன்று வழங்க வேண்டும் எனக் கோரி உறுப்பினர் ந.லோகதயாளன் தீர்மானமாக முன்மொழிந்தார்.

குறித்த விடயம் எமது சபையின் ஆளுகைக்கு உட்படாத போதிலும் மாகாண மக்களின் அத்துயாவசிய விடயம் என்ற வகையில் குறித்த விடயம் தொடர்பில் சபை கவனம் செலுத்தி இதிலே பரிந்துரைத்த அனைவரிற்கும் உரிய விடயம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

வடக்கு மக்களின் தேவை கருதி குறித்த விடயத்மை உறுப்பினர் சி.குலேந்திர்ராய வழிமொழிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. –