கொரோனா நோயாளியின் மகனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

1 p44a
1 p44a

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கற்கும் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனப் பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமூக வலைத்தளங்கள், கையடக்கத் தொலைபேசி ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் நாளாந்தம் ஊடக அறிக்கையை வௌியிடுவதற்குத்  தீர்மானித்துள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது.

குறித்த நோயாளியின் குடும்பத்தினர் பாரிய ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தக் குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரின் மகன், கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி பயில்வதால் இன்று காலை தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்” – என்றார்.