கொரோனா தாக்கம் தொடர்பில் முன்னேற்பாடுகள் தேவை; முதல்வர் ஆளுநரிடம் கோரிக்கை

1 6
1 6

கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் தொடர்பில் முன்னேற்பாடுகள் தேவை என யாழ்நகர முதல்வர் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை  விடுத்துள்ளார் .
மேற்குறித்த விடயம் தொடர்பில் கௌரவ ஆளுநருக்கு இன்று 19.03.2020 அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கமானது வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தி ஆட்டங்காண வைத்துள்ளது. இந்நிலையில் இவ் வைரஸ் தாக்கமானது வடக்குமாகாணத்தில் இதுவரை ஏற்படவில்லை என்ற சிந்தனையோடு, எவ்வித முன்னெச்சரிக்கையும், முன்னேற்பாடுகளுமின்றி அசமந்த போக்கில் இருக்கின்றோம் என எண்ணத்தோன்றுகின்றது. எனவே இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கடந்த 17.03.2020 அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பாக வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர்கள், சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களினதும் மாவட்ட செயலர்கள், வடமாகாண அனைத்துப் பிரதேச செயலர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் கூடிய கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் விதமாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொது மக்களின் தேவையற்ற நடமாட்டங்களை யாழ் நகர்ப்பகுதியில் மட்டுப்படுத்தும் விதமாக மக்களின் அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்யும் பலசரக்கு வியாபார நிலையங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை மூட உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலே பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந் நிலையில் குறித்த நோய்த்தாக்கத்தின் பின்னரும் யாழ் நகர் பகுதியில் அதிகளவான மக்கள் கூடுவதை நாம் கடந்த ஓரிரு நாட்களாக அவதானிக்க முடிகின்றது. அத்துடன் வெளிநாட்டவர்களின் நடமாட்டங்களையும் அதிகளவில் காணக்கூடியதாகவுமுள்ளது.
மேலும் திறந்த வெளியில் உணவு பரிமாற்றங்களை மேற்கொள்ளும் கடைகள், உணவகங்கள், குளிர்பானசாலைகள், மதுபானசாலைகள், சிகை மற்றும் அழகக ஒப்பனை நிலையங்கள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்கு மூடுவதற்கான அறிவுறுத்தல்களை உரிய தரப்பினர்களுக்கு வழங்கியுதவுமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் தங்களின் விரைவான நடவடிக்கைகள் எம் மக்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் காத்திரமான பங்கை வகிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளது.

நன்றி,
இவ்வண்ணம்
இம்மானுவல் ஆனல்ட்,
முதல்வர் – யாழ் மாநகரசபை