முதலை கடித்து சிறுவன் பலி!

Capture 2
Capture 2

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் சிறுவனை முதலை கடித்து இழுத்து சென்றதாக அவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.

புணாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் வயது 15 எனும் சிறுவனே முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.