தற்போதய நிலையில் இலங்கையில் வறுமை நிலையில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வாரத்துக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் அல்லது அதற்கு நிகரான நிவாரணப்பொதியொன்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கூறியுள்ளார்.
அரசாங்க திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்து வரும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பில் தீர்மானம் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தி வருவதால் சுயதொழில் செய்துவரும் குடும்பத்தினர் மற்றும் நாட்கூலி குடும்பத்தை நடத்திவருபவர்கள் உணவுக்கு வழியின்றி துன்பப்பட்டு வருகின்றனர்.
அதனால் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வாரத்துக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தோம். அதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அரசாங்கம் வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானித்திருக்கின்றது.
இந்நிலையில் அரசாங்கம் சதொச ஊடாக நிவாரண அடிப்படையில் விற்பனை செய்யும் பொதிகளில் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிவாரண பொதிகள் பொதுஜன பெரமுன கட்சியின் நிதியத்தில் இருந்து வழங்கப்படுவதல்ல. அரசாங்கத்தின் நிதியாகும்.
ஆகவே அரசியல் நோக்கில் செயற்படாமல் வறுமை நிலையில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.