ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட சுகாதார துறையினர் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது சிகிச்சை பெற நேரிட்டால் ஊரடங்கை கருத்தில் கொண்டு வீடுகளில் இருந்துவிட வேண்டாம் எனவும் இக்காலத்தில் அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள் பிரிவுகளில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தகர்களுடன் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு செல்வதற்கான உதவியை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது
கிளிநொச்சியில் ஊரடங்கு வேளையில் சிறுவர்கள், பிரசவத்தின் பின்னரான தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகள் எவருக்காவது காய்ச்சல் அல்லது வேறு நோய் நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தத்தமது பகுதி பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களை தொடர்புகொண்டு அரச வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரவு உதவிகளைப் பெற்றிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை காரணமாக கொண்டு வைத்தியசாலைகளுக்கு தாமதமாக சென்ற பொதுமக்கள் சிலர் தற்போது கடுமையாக பாதிகப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.