அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார் எனத் தெரிவித்து கடந்த 8ஆம் திகதி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்தவருக்கு எதிராக 50 இலட்சம் ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டத்தரணி ராதீப் அஹமத்தால் குறித்த முகநூல் பக்கத்தின் உரிமையாளருக்கு கடிதமொன்று கடந்த10ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் அவசர நிலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஒழுங்கு விதிகளை குறித்த முகநூல் உரிமையாளர் மீறியுள்ளார் என்று சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எனது கட்சிக்காரருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த நேரடி ஒளிபரப்பு இருந்தமையால் எனது கட்சிக்காரரும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த கடிதத்தில் சட்டத்தரணி ராதீப் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன உளைச்சல் மற்றும் அவமானம் என்பவற்றுக்கு 50 இலட்சம் ரூபாவை எனது கட்சிக்காரர் மதீப்பீடு செய்கின்றார். இந்த நட்டஈட்டை 14 நாட்களுக்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்தரணியால் பேஸ்புக் உரிமையாளருக்கு அனுப்பியுள்ள கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.