யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
.
சந்தேக நபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.
“ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள், மின்பம்பி மற்றும் இலத்திரனியல் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் முனசிங்க தலைமையிலான அணியினர் நடாத்திய விசாரணையின் போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் வயோதிபர் ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருள்களை திருடிய குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணைகளில் 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாவற்குழியைச் சேர்ந்தவர்கள்.
களவாடப்பட்ட 6 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.