அரச,தனியார் பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்!

2 es
2 es

இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான பின்புலத்தை அமைப்பதற்குத் தேவையான உதவியை அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்தார்.