பாடசாலைகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானமில்லை!

4 rr 3
4 rr 3

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன. எனினும், நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையைக் கருத்தில்கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

இந்தநிலையில் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், “எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டே பாடசாலைகளைத் திறப்பது பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும், பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் சுகாதாரத்துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.