தேசிய பிரச்சினைக்கான தீர்வில் கட்சிகள் அசமந்தம்- இரா.சம்பந்தன் அதிருப்தி

IMG 5224
IMG 5224

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும் முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான கௌரவ தாரிக் அஹமத் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் ஆகியோரை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான ஒரு அரசியல் அதிகார பரவலாக்கத்தின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம்.

நாங்கள் பிரிபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன்றினையே வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம் என தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், கடந்த 30 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கிய அதேவேளை இதுவரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

அண்மைகாலங்களில் வரைபு யாப்பு வரை எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் எல்லா கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு கடந்த 25 வருட காலமாக வாக்குறுதி கொடுத்து வந்திருந்தாலும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியதில்லை எனவும் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசியல் கட்சிகள் காட்டிவரும் அசமந்த போக்கு தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் மக்கள் தமது நாளாந்த
நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களே முடிவெடுக்கக்கூடிய ஒரு ஜனநாயகமே எமது தேவை என்பதனையும் வலியுறுத்தினார். நாம் எமது நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக முறையில் முன்வைத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய யுத்தம்
இடம்பெற்றது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இடம்பெறவில்லை. விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அந்த காலகட்டத்தில் பிரித்தானிய உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு, இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு நிச்சயம் காணப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது என்பதனை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றினை எட்டுவதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்பதையும் வலியுறுத்தினார். இந்த நாட்டில் இன்னுமொரு வன்முறை நாம் விரும்பவில்லை எமது மக்கள் அதிக வேதனையை அனுபவித்துள்ளார்கள் என தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஐக்கிய இராஜ்ஜியம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஆக்கபூர்வமான இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படும் என உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா கூல்டன் அமைச்சரின் செயலாளர் லோரா டுன்பர் ப்ரூக்ஸ் செயலாளர் நீல் கவனக் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரி ஜொவிட்டா அருளானந்தம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.