உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு!

0 2
0 2

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.

இந்த தாக்குதல்களில் அவயங்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து நாட்டு மக்களும் அந்த ரணங்களை நினைந்து ஓராண்டு நினைவை ஆத்மார்த்தமாக நினைவுகூரும் வேளை இதுவாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியான இதேநாளில் உயிர்த்த ஞாயிறு புனித நாளில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்றதும், இலங்கை மக்களை உலுக்கிய கோரச் சம்பவமாகவும் மாநகர் கொழும்பு மற்றும் ஏனைய சில நகரங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கை வரலாற்றில் பதிவாகின.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று புத்தாடைகளை அணிந்து தேவாலயங்களுக்கு மக்கள் சென்ற வேளை, இலங்கையின் இயற்கை அழகில் இலயித்திருக்கலாமென்ற ஆவலில் இலங்கைக்கு வந்து விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் உணவருந்த கூடிநின்றவேளை அவர்களின் அவா அனைத்தும் அந்த காலை நேரத்தில் நொடிப்பொழுதில் சிதறிப் போயின.

அன்றைய நாளில் காலை 8.45 மணிமுதல் 9.15 மணி வரையிலான குறுகிய நேரத்திற்குள் இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் மூன்றிலும் இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்கள் நடந்தன.

முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்றதுடன் அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்டது நிலையில் அங்கு 50இற்கும் அதிகமானோர் மரணித்தனர்.