தற்போதய அசாதாரன நிலையையும் கருத்து வேறுபாடுகளை குறைக்கவும், மக்களைக் கட்டுப்படுத்தவும் அவசரகால சட்டத்தை ஒரு ஆயுதமாக அரசாங்கங்கள் பயன்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 80 நாடுகள் அவசரநிலைகளை அறிவித்துள்ளன, அவற்றில் 15 இடங்களில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகளவாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதில் நைஜீரியா, கென்யா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, எல் சல்வடோர், டொமினிகன் குடியரசு, பெரு, ஹோண்டுராஸ், ஜோர்டான், மொராக்கோ, கம்போடியா, உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.
இந் நாடுகளில் சில தொற்றுநோயுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளன, கடந்த 30 நாட்களில் ஊரடங்கு உத்தரவு மீறல்களுக்காக கைது செய்யப்பட்ட 120,000 பேருடன் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது எனவும் அவர் குறிக்கிட்டுள்ளார்.