கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்: ‘கொரோனா’ அபாய மாவட்டங்களில் மே 11 வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு!

7 sdsf
7 sdsf

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாய மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 04ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04 ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை முன்னர் போன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி அமுலில் இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06ஆம் திகதி இரவு 8 மணிக்குப் பிறப்பிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மே 11ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது, நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனச் செயற்பாடுகளை இயல்புநிலைக்குக்  கொண்டுவருதல் மே மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளைத் தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளின் தேவையைக் கவனத்தில்கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காகச் செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக தொழிலுக்கு சமுகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும்.

இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.