சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு மைத்திரி அழைப்பு!

Maithripala Sirisena
Maithripala Sirisena

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அறிவித்தல் ஒன்றும் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதா அல்லது மஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதா என்ற அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி குறித்து தீர்மானிக்கும் இறுதி சந்திப்பொன்றும் இன்று இடம்பெறவுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது பரந்துப்பட்ட கூட்டணிக்காக இரு தரப்பினராலும் உருவாக்கப்பட்ட கொள்கை ரீதியான பிரேரணைகள் குறித்து பரிசீலனை செய்யப்படவுள்ளன.

அத்தோடு பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னம் குறித்து எழுந்துள்ள முரண்பாடான கருத்திற்கு இறுதி தீர்வு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.