ஊரடங்கு அமுலில் இருக்கும் போதே இயல்பு வாழ்க்கை – விசேட வர்த்தமானி வெளியாகும் !

 பொலிஸ் மா அதிபர்
பொலிஸ் மா அதிபர்

நாட்டின் ,கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மே 11 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிறத்த இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசேட வரத்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

நாட்டின் எதிர்வரும் (11) ஆம் நாள் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில், மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள போதிலும் வேலைத்தளங்கள் திறக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனியார் வேலைத்தளங்களும் திறக்கப்படவுள்ளன. தினமும் காலை 10.00 மணிக்கே பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று முன்னரே கோறப்பட்டுள்ளது.

சேவைக்கு திரும்ப வேண்டிய ஊழியர்கள் தொடர்பில் நிறுவனப் பிரதானிகளே தீர்மானிக்க வேண்டும். இது ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதன் படி ஒழுங்குமுறையின் கீழ் நடைபெற வேண்டும்.

மேலும் இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் (6) ஆம் நாள் புதன்கிழமை வரை தினமும் சுமார் 15 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. எனினும் மேல் மாகாணம் சிக்கலுக்குரியதாகவும் இருக்கும்.

இருந்த போதிலும் மேல்மாகாணத்தை திறக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை.

எனவே ஜனாதிபதி செயலகம் அறிவித்ததைப் போன்று மேல்மாகாணமும் திறக்கப்படும். மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல் இருந்தாலும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பாதுகாப்புத்துறையினரும் சுகாதாரத்துறையினரும் இதற்குத் தயாராகவே உள்ளனர்.

மேல் மாகாணத்தில் வேலைத்தளங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

முதலாவது ஒரு மாவட்டத்திலிருந்து பிரிதொரு மாவட்டத்துக்கு பணிக்குச் செல்ல முடியுமா?, இரண்டாவது அவ்வாறு செல்வதானால் தாம் எவ்வாறு பயணிப்பது?, மூன்றாவது எவ்வாறு இதனைக் நடத்திச் செல்வது? என்பவையாகும்.

வேறு மாவட்டங்களுக்கு தொழிலுக்குச் செல்பவர்கள் குறிப்பாக கொழும்பிற்கு தொழிலுக்கு வர இருப்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு ஏற்பவே வருகை தர முடியும். எனினும் இது தொடர்பில் சில சட்ட ரீதியான ஒழுங்குமுறைகளை முன்வைக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.

பொது போக்குவரத்து சாரதிகளினதும், நடத்துனர்களினதும் அவற்றின் உரிமையாளர்களின் பொறுப்பும் கடமையும் யாது? என்பது பற்றியும் இரண்டாவதாக உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது? என்பது பற்றியும் மூன்றாவதாக ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் என்பன பற்றியும் விசேட ஆலோசனை விதிமுறைகளை வெளியிட எதிர்பார்த்ததிருக்கின்றோம்.

மேலும் சிகை அலங்கார நிலையங்கள் , அழகுபடுத்தல் நிலையங்கள், தனியார் மருந்து விற்பனை நிலையங்கள் பற்றியும் ஆலோசனை விதிமுறைகள் வெளியிடப்படவுள்ளது.

பொது சேவை திணைக்களங்கள் நிறுவனங்களில் மக்கள் ஒன்று கூடக்கூடிய முறைகள் அந்தந்த திணைக்கள அல்லது நிறுவன பிரதானிகளின் பொறுப்பிலானதாகும்.

இவ்வாறு மக்கள் கூடும் முறைமைகள் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்தால் அது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.