கூட்டமைப்புக்காக தமிழீழத்தை தாரைவார்க்கோம்!

5 768
5 768

“நாட்டின் நலன் கருதி நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்தமைக்காக அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்புக் கனவை – சமஷ்டிக் கோட்பாட்டை – பிரபாகரனின் தமிழீழ இலட்சியத்தை அரசு நிறைவேற்றும் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அதை நாம் வழங்கவே மாட்டோம். எமது படையினரின் தியாகத்தை நாம் கொச்சைப்படுத்தவே மாட்டோம்.”

– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“தற்போதைய எதிர்க்கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வித்தியாசமானது. நாட்டைப் பற்றியும் மக்களின் நலனைப் பற்றியும் கூட்டமைப்பினர் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். நெருக்கடியான நிலையில் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அவர்கள் முன்வந்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசால் நிறைவேற்றவே முடியாது.

புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் புதிய நாடாளுமன்றத்தில் அரசு அலசி ஆராயும். எனினும், கூட்டமைப்பினர் விரும்பும் சமஷ்டிக்கு இங்கு ஒருபோதும் இடமே இல்லை.

இந்த நாட்டில் ஒற்றையாட்சிதான் தொடர்ந்து இருக்கும். அதனூடாகத்தான் சகலரும் ஏற்கும்  அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க முடியும். இந்த நிலைப்பாட்டிலிருந்து ராஜபக்ச அரசு ஒருபோதும் பின்வாங்கவேமாட்டாது” – என்றார்.