அரசியல் தீர்வே தமிழருக்கு முக்கியம் இனவாதிகளின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு

73ad
73ad

“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதைப் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வுடன் நடத்திய பேச்சின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரிவாக எடுத்துரைத்துள்ளது. தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் இனவாதிகள் அதனைக் குழப்பியடிக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவார்கள். எனவே, அவர்களின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு என்பதையும் பிரதமரிடம் நாம் சுட்டிக்காட்டினோம்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு மற்றும் அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமருடன் நாம் நடத்திய பேச்சு ஆரோக்கியமானதாக இருந்தது. அது எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. எனினும், கடந்த கால கசப்பான வரலாற்றையும் நாம் மறக்கமாட்டோம்.

நாம் வலியுறுத்த வேண்டிய விடயங்கள் அனைத்தையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளோம். அத்துடன் எமது கோரிக்கைகள் அடங்கிய எழுத்து மூல மனுவையும் பிரதமரிடம் நேரில் சமர்ப்பித்துள்ளோம்.

எமது கோரிக்கைகளில் அரசியல் தீர்வு முக்கியம் என்பதையும் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளோம். கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்புப் பணிகள் எதிர்ப்புகளால் இடைநிறுத்தப்பட்டன. எனவே, அந்தப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பிரதமரிடம் சுட்டிக்காட்டினோம்.

அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உட்பட நாம் முன்வைத்த கோரிக்கைகள் எவற்றையும் பிரதமர் நிராகரிக்கவில்லை. அவற்றை சாதகமாகப் பரிசீலிப்பதாக அவர் வாக்குறுதியளித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார் போல் தென்படுகின்றது. எனினும், அவரின் வாக்குறுதிகள் செயல் வடிவில் நிறைவேறும்போதுதான் அதை நாம் வரவேற்கலாம். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான எமது சந்திப்பு தொடர்பில் சில தரப்பினர் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். இந்த விமர்சங்கள் வரும் என்று எமக்கு முன்னரே தெரியும். தமிழ் மக்கள் நலனில் நாம் அக்கறையுடன் தொடர்ந்து செயற்படுவோம். தீர்வு கிடைக்கும்வரை எமது அர்ப்பணிப்புகள் தொடரும்” – என்றனர்.