வாள்வெட்டுக்கு இலக்காகிய காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர்

hj
hj

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.

சங்கானையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் முத்துலிங்கம் உதயானந்தன் (வயது – 35) என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானார்.

கீரிமலைப் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அதுதொடர்பில் விசாரணை நடத்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணி சம்பவ இடத்துக்குச் சென்றது.

அப்போது பொலிஸாரின் வருகையறிந்து வன்முறையில் ஈடுபட்டோர் தப்பி ஓடிய நிலையில் அவர்கள் மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வீட்டின் படலையைத் திறந்து உள்ளே செல்ல முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது அதனை தடுக்க முற்பட்ட அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

சம்பவத்தையடுத்து பொலிஸ் அலுவலகரை வாளால் வெட்டியவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

உப பொலிஸ் பரிசோதகர், கையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிக்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.