கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு கோரிக்கை !!

2 1
2 1

அவுஸ்ரேலியாவில் இருந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கறவைப் பசுக்களும் அவற்றின் சந்ததியும் இறந்துவிட்டதால், கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை திட்டத்தை இடைநிறுத்துமாறு அகில இலங்கை கமநல சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு கடந்தவாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது நாட்டில் நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் நாளாந்தம் 3.5 மில்லியன் லீற்றர் பால் தேவைப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியிருந்தார்.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவிலிருந்து நோயுற்ற பசு மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்கத்தின் ஒரு பகுதியின் அக்கறையின்மை காரணமாக பால் விவசாயத் துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மையில் மாடுகளை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றும் அவுஸ்ரேலியாவில் இருந்துவரும் கறவைப் பசுக்களுக்கு இலங்கையின் காலநிலை பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.