சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள் மக்கள்

ll 1
ll 1

“தற்போது நாட்டின் சிவில் சட்டத்தை மீறிச் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஏற்கனவே செய்த குற்றங்களுக்காகச் சிறையில் இருக்க வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் மக்கள். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலாவது இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் சிவில் சட்ட விதிகளை மீறி வருவதுடன் இராணுவ ஆட்சியையும் பலப்படுத்தி வருகின்றனர்.

நிர்வாகத்துறை , கண்காய்வு , வெளிநாட்டு விவகாரம் , பொருளாதார முகாமைத்துவம் போன்ற துறைகளுக்கு பரீட்சைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்தத் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை விடுத்து இராணுவ அதிகாரிகளை அவற்றில் அமர்த்துவது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான நோக்கமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்ட விதிமுறைகளை மீறி அரசு செயற்பட்டு வருவதை அண்மையில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்களது செயற்பாடுகளின் காரணமாக இவ்வளவு நாளும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் பல்வேற்று ஆலோசனைகளை வழங்கி வந்த கொரோனா வைரஸ் பரவலைக்  கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்க செயலணியினரும் அமைதி காத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில்கொள்ளாது அவர் இஷ்டம்போல் நாட்டுக்குள் வந்துள்ளார்.

கடந்த காலங்களில்  நல்லாட்சி அரசு அமெரிக்காவுக்குத் துணைபோவதாகத் தெரிவித்து வந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச , உதய கம்மன்பில ஆகியோர் தற்போது எங்கே? இந்த அமெரிக்க இராஜதந்திரி தொடர்பான விவரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம்தானே. தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்? ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கப் பிரஜை என்பதினாலா? இந்த விடயம் தொடர்பில் அலட்சியமாக இருத்தல்கூடாது. அதனால் இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர்  மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.