பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது குறித்த கலந்துரையாடல் இன்று

voting
voting

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அதற்கமைய இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்வரும் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் கடந்த 2ஆம் திகதி உயர்நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, பொதுத் தேர்தலை எந்த தினத்தில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு கடந்த 3ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த அறிவிப்பானது அன்றைய தினம் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியினை இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

அதேநேரம் நாளை மறுதினம் சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாளைய தினத்திற்குள் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்

தற்போது 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல் ஒத்திகை நேற்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.