லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது –கோட்டாபய ராஜபக்ச

NW05
NW05

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை ஷபறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என்பதால் ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் பதில் பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

லீசிங் நிறுவனங்களினால் அவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதில்லை. அவர்கள் பொலிஸில் முறையிடுவது வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னரேயாகும்.

பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சில வேளைகளில் பாரதூரமான வன்முறைக்கு காரணமாகின்றது. பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் லீசிங் கடன் தவணையை அறவிடுவதை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 16/2020 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் இரண்டாவது பிரிவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கடன் தவணை செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், கடன் தவணையை கட்டவில்லை எனும் காரணத்தின் அடிப்படையில், லீசிங் நிறுவனத்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்படும் வேளையில் அதனை பரீட்சித்து, குறித்த நிவாரண காலப்பகுதியில் அது காணப்படுமாயின், அது தொடர்பான முறைப்பாட்டை எடுக்க வேண்டாம் என, பதில் பொலிஸ் மா அதிபரினால் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், குறித்த நிவாரண காலத்தில் கடன் தவணையை செலுத்தாமை காரணமாக கையகப்படுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால், அதனை பதிவு செய்து, இலங்கையின் தண்டனை கோவை சட்டத்தின் கீழ், களவு அல்லது கொள்ளை ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு வாகனங்களை கைப்பற்றிய பின்னர் குறித்த லீசிங் நிறுவனமோ, நிதி நிறுவனமோ முறைப்பாடுகளை மேற்கொள்ள வரும்போதும், அது தொடர்பில் உரிய நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.