புத்தளம் மரிக்கார் வீதியில் நேற்று (12.06.2020) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த கஸ்ஸாலி முஹம்மது துவாரிக் (வயது 52) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற தினம் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள பாதுகாப்பு மதில் மீது மோதி விபத்துள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தளவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விபத்தால் குறித்த நபரின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது என தீர்ப்பு வழங்கி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
புத்தளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.