கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்துகள் குறித்த நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிக நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறதா என்பதை ஆராய்ந்து அவ்வாறான பேருந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் செயற்பாடு ஒன்று நேற்று (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 267 இடங்களுக்கு செல்லும் பேருந்துகளின் நடவடிக்கைகள் குறித்து 22 பேருந்து தரிப்பிடங்களில் இருந்து கண்காணிக்கப்பட்டது.
இதன்போது 119 பேருந்துகள் குறித்த நேரத்திற்குள்ள பயணித்துள்ளதாகவம் 55 பேருந்துகள் கால தாமதமாக பயணித்ததாகவும் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது தாமதமாக பயணித்த பேருந்து சாரதிகள் அறிவுறுத்தப்பட்டனர். குறித்த செயற்பாடு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு அவசர அழைப்பு பிரிவு மற்றும் பிரதேச வலய போக்குவரத்து பிரிவினரும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.