ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கை முயற்சி

1 yasmin
1 yasmin

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது.

மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ஊடாக இவ்விடயம் தொடர்பாக ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதம் தொடர்பாக புலனாய்வு அதிகாரியின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளதாவது, “மேஜர் ஜெனரல் சால்லேயிற்கு எதிராக பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளீர்கள்.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டுகள் காரணமாக உள்நோக்கம் கொண்ட சக்திகள் புலனாய்வு பிரிவின் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சாலேயின் குணாதிசயங்கள் மற்றும் அவரது திறமையான செயற்பாடுகளிற்காகவே அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்றன.

எனினும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இலங்கை குறித்த இணையத்தளம் மூலம் ஜஸ்மின் சூக்கா வெளியிட்ட அறிக்கையால், புலனாய்வு அதிகாரியின் குணாதியசத்திற்கும் கௌரவத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, ஜஸ்மின் சூக்கா எதிர்காலத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாவிடின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டி ஏற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.