கோட்டாவின் அதிகார வெறியால் ராஜபக்ச குடும்பத்துக்குள் சர்ச்சை – சஜித் அணி தெரிவிப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 3

“அதிகாரங்களைத் தனக்குக் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துவரும் நடவடிக்கைகளினால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ச குடும்பத்துக்குள்ளும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் ‘தாமரை மொட்டு’ கட்சியே எமக்குச் சவாலாக இருக்கப்போகின்றது. 26 வருடங்களாக நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தற்போது சிறந்தவராக முடியாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொத்மலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி அரசில் இருக்கும் அதிகாரங்களைத் தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.
அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும்போது தனக்குத் தேவையானவர்களையே நியமித்திருக்கின்றார்.

அதேபோன்று ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்களைக்கொண்டு செயலணிகளை அமைத்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் அமைச்சர்களுக்கிடையில் பிரச்சினை தலைதூக்கி இருக்கின்றது.
அதுமாத்திரமின்றி ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் ராஜபக்ச குடும்பத்துக்குள்ளும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் இம்முறை தேர்தலில் எமக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே சவாலாக இருக்கப்போகின்றது. ராஜபக்சவினருடன் மாத்திரமே எமக்குப் போட்டியிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியை அங்கீகரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அதன் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்துடன் பொதுச்செயலாளரைத் தெரிவுசெய்யும் அதிகாரத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கியது. இது தொடர்பான கடிதத்தில் ரணில் விக்கிரமசிங்கவே கைச்சாத்திட்டிருக்கின்றார். நாங்கள் தவறு செய்யவில்லை.  அவர்கள்தான் செய்த தவறில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர்” – என்றார்.