போராட்டங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி அழித்தவர்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வீர வசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் பாராளுமன்ற திகாமடுல்ல மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
இன்று காலை தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வினை நாவிதன்வெளி 15 ம் கிராமம் சிறி முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
இங்கு கருத்து தெரிவிக்கையில்…
எமது பிரதேசத்தில் எமது அரசியல் பிரவேசத்தின் பின்னரே அபிவிருத்திகள் நடந்தேறின . எமது மக்களை சின்னாபின்னமாக்குவதற்கு சிலர் தேர்தல் காலத்தை பயன்படுத்தி பலதரப்பட்ட பிழையான காரியங்களை பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எமது மக்களுக்கு தெரியும் யார் எவ்வாறு செயல்படுபவர்கள் என்று கடந்த காலங்களில் எமது சமூகத்தை குழப்பி இல்லாமல் செய்துவிட்டு தமிழர்களின் பலமான போராட்டங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி அழித்தவர்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வீர வசனம் பேசி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக உலா வருகின்றனர்.இந்த விடயத்தை மக்கள் அறிவார்கள். இவர்களுக்கு தகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்டுவார்கள்.
இன்று தமிழ் மக்களுக்கான தீர்வை அரசு வழங்குவதற்கு தயாராக இருப்பது போலவும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுப்பது போலவும் சில அரசியல் வாதிகள் கூறுகின்றனர்.
எந்த ஒரு அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுப்பவர்களாக தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்திருக்கிறார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது . அநீதிகள் ஏற்படும் போது வாய் மூடி மௌனிகளாக இருந்து அவர்களோடு ஒட்டி உறவாடி எம்மை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் .
இவர்கள் தமிழ் மக்களுக்கு அநீதி நடைபெற்ற போது எங்கிருந்தார்கள் என்ன செய்தார்கள் என்பதனை அறிய வேண்டும். இந்த அரசாங்கத்தின் தூர நோக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.இதற்கெல்லாம் சோர்ந்து போக முடியாது . இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக சக்தியாக இருக்கிறது என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு சிவ சிறி கு. சுபாஷ்கர் ஷர்மா , ஆலய தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.