ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நீரில் மூழ்கி மரணம்!

unnamed 5 1
unnamed 5 1
  • மற்றுமொருவர் ஆபத்தான நிலையில்

வத்தளை, திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த (03) பெண்களும், (14) வயதுச் சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோவிட்ட மயானத்துக்கு முன்பாகவுள்ள கடலில் குளிக்கச் சென்றவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று (20) பிற்பகல் (3.30) மணியளவில் இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தின் உறவினர்களான (04) பெண்கள், ஒரு சிறுவன் ஆகியோர் குறித்த கடலில் குளிர்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இது தொடர்பில் வத்தளைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பெண்கள் நால்வரையும், சிறுவனையும் மீட்டு, கரைக்குக் கொண்டு வந்து, ராகமை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

எனினும், அதில் 3 பெண்களும், சிறுவனும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் ஆபத்தான நிலையிலுள்ள மற்றுமொரு பெண் ராகமை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

புபுதுகம, உஸ்வெட்டகெய்யாவ, பதுளை, ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த (16, 20, 30) வயதுடைய பெண்கள் மூவரும், கந்தானை, கன்தெவத்த பிரதேசத்தைச் சேர்ந்த (14) வயதுச் சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வத்தளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.