கொரோனாவை கட்டுப்படுத்திய இலங்கைக்கு பாகிஸ்தான் பாராட்டு!

Pakistans Prime Minister Imran Khan

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிரான இலங்கை சிறந்த முறையில் செயற்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு  இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில்  ஜனாதிபதி விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சார்க் நாடுகளின் ஒத்துழைப்புடன் நிலையான அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்  கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.