நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் மகா சபை சார்பில் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (27) முற்பகல் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைத்த பின்னர் தனது பிரசாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நாவிதன்வெளியில் மக்கள் சந்திப்பில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய கருணா பின்னர் தனது பிரசாரப் பணியை முன்னெடுப்பதற்காக அம்பாறைக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், அவர் தனது பிரசாரத்தை உத்தியோக பூர்வமாக இன்று கல்முனையில் ஆரம்பித்து வைத்தார். அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அவரை வீதியில் அழைத்து வந்தனர்.
அத்துடன் வாகனப் பவனி ஒன்றையும் அவருக்கு ஆதரவாக அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்டதுடன் பட்டாசுகளையும் கொளுத்தி பாரிய வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கல்முனையில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற கருணா பூஜையில் ஈடுபட்ட பின்னர் தனது முதல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.
கப்பல் இலச்சினையுடன் கருணாவின் பல துண்டுப்பிரசுரங்கள் கல்முனை நகரப் பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.