புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள்- சிவசக்தி

DSC 0234
DSC 0234

நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி காலத்தில் கூட மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் இடம் பெறாமை மக்களை அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை(29) மன்னாரில் பல்வேறு கிராமங்களில் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கான குடி நீர் பிரச்சினை உள்ளதோடு, கிராமங்களுக்கான பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. நீண்டகாலமாக பாதைகள் திருத்தப்படாமல் இருக்கின்றது. மேலும் வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியிலே தொடர்ச்சியாக மக்கள் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்,மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக தாங்கள் பல்வேறு தேர்தல்களில் வாக்களித்து வருகின்ற போதும் தமது கிராமங்களின் நீண்ட கால பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் மக்கள் சந்திப்பின் போது கிராம மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது கூட மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து இறக்கி ,மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக வெற்றி பெற வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்கி நல்லாட்சி காலத்தில் கூட தங்கள் கிராமங்களுக்கான அபிவிருத்தி சம்பந்தமான எவ்வித பணிகளும் நடை பெறாமல் இருப்பதனை மக்கள் எங்களிடம் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

எங்களை பொறுத்தவகையில் வன்னி மாவட்டத்தில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மக்கள் பல தேர்தல்களிலே நிதானமாக வாக்களித்த மக்கள். இம்முறை மக்கள் இது வரை காலமும் குறிப்பாக கடந்த 20 வருடங்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து வந்த மக்கள் மிக விரக்கி அடைந்த நிலையில் தங்களுக்கு ஒரு அபிவிருத்தியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை.ஆகவே தாங்கள் இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாது என்பதனை எங்களுக்கு கூறியுள்ளார்கள்.

தேசியக்கட்சியில் இருக்கின்ற சில எதிரிக் கட்சிகளுக்கும் தாங்கள் வாக்களிக்க மாட்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள்.நாங்களும் எமது கட்சியின் நிலைப்பாடு, எதிர் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.மக்கள் ஆதரவு வழங்கவும் தயாராக உள்ளனர். என அவர் மேலும் தெரிவித்தார்.