சிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு!

1012454120

ஒரே நாளில் 75 கள்ள வாக்களித்தேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சட்டத்தரணி ஸ்ரானிஸ்ஸாஸ் செலஸ்ரினினால் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரே நாளில் 75 வாக்குகளை அளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே அதுதொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என யாழ் மாவட்ட தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு அத்தாட்சியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சட்டத்தரணி ஸ்ரானிஸ்ஸாஸ் செலஸ்ரின் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.