மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், 13 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுமஸ்கெலியா தோட்டத்தின் லங்கா பிரிவில் இன்று 2ஆம் திகதி காலை 8. மணியளவில் இடம்பெற்றுள்ளது. பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 13 தொழிலாளர்களை, கலைந்து வந்த குளவிகள் கொட்டியுள்ளன. இந்நிலையில், குளவிகள் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய கூறுகையில்,
குளவி கொட்டுக்கு இலக்காகிய 13 தொழிலாளர்களில், எட்டு தொழிலாளர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய ஐந்து தொழிலாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த மாதங்களிலும் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அதனை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எவரும் முன் வருவதில்லையென வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ள தொழிலாளர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு, உரிய அதிகாரிகள் குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.